அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் உள்ள குர்ஆன் மதரஸாவில் சிறுவன் ஒருவன் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட ஜனாஸா மீட்கப்பட்டதுடன் சிறுவனின் மரணத்தில் சந்தேகம் தெரிவித்து பொதுமக்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (05) இரவு மதரஸாவை முற்றுகையிட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டதையடுத்து மதர்ஸாவின் நிர்வாகியை பொலிசார் கைது செய்தனர்.

காத்தான்குடி பிரதேசத்தை சேர்ந்த 13 வயதுடைய எம்.எஸ்.முஷாரப் என்ற சிறுவனே தூக்கில் தொங்கிய நிலையில் ஜனாஸாவாக மீட்கப்பட்டார்

குறித்த மதரஸாவில் தங்கியிருந்து குர்ஆன் கல்விகற்று வந்த மாணவன் சம்பவதினமான நேற்று மாலை துக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டான் இந்த நிலையில் அந்த மாணவனின் மரணம் தற்கொலையல்ல கொலையாகவே இருக்கும் எனவும் மதர்ஸாவின் நிர்வாகி மீது ஏற்கனவே நிறைய பொலிஸ் முறைப்பாடுகள் இருப்பதாகவும் கூறி பொதுமக்கள் மதரஸாவை முற்றுகையிட்டு கலகத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து பொலிசார் ஜனாஸாவை மீட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்ததுடன் நிர்வாகியை கைது செய்ததுடன் குழப்பத்தில் ஈடுபட்டவர்களை மதராஸாவின் மான்பை பேணும்விதமாக மக்கள் கலைந்து செல்லுமாறும், இந்த மரணம் தொடர்பில் நியாயமான விசாரணையை முன்னெடுக்க பொலிஸார் தயாராக இருப்பதாகவும், தடயியல் பொலிஸாரையும், நீதவானையும் வரவழைத்து மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாவும் பொதுமக்களுக்கு வழங்கிய உறுதியையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சாய்ந்தமருது பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.