சாய்ந்தமருது பொலிஸ் பிரிவுக்குட்பட்ட
மத்ரஸாவில் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்ட மாணவனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ள நிலையில் அதன்படி இது தற்கொலையல்ல கொலையாக இருக்க கூடும் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது சந்தை வீதியில் அமைந்துள்ள மத்ரஸா ஒன்றில் கடந்த 05ஆம் திகதி இரவு மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பகுதியை சேர்ந்த எம்.எஸ். முஸ்அப் (வயது-13) எனும் மாணவன் தூக்கில் தொங்கி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

மர்மமான முறையில் உயிரிழந்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

அந்த விசாரணையின் போது குறித்த மாணவனின் கழுத்து நெரிபட்டதால் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்தியர் தெரிவித்துள்ளார்.

மேலும் மத்ரஸாவில் இருந்து கிடைக்கப்பெற்ற தடயப்பொருட்களைக் கொண்டு பார்க்கும் பொழுது இது கொலையாக இருக்கலாம் என சாய்ந்தமருது பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளதோடு குறித்த மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அம்பாறை வைத்தியசாலையில் குறித்த மாணவனின் பிரேத பரிசோதனை முடிவடைந்து ஜனாஸா காத்தான்குடிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.

ஜனாஸா நல்லடக்கம் இன்று (07) மஹ்ரிப் தொழுகையை தொடர்ந்து மெத்தைப் பள்ளிவாயலில் நடைபெற்று அதே மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.