விபத்தில் உயிரிழந்த யாசகரின் பையில் ஐந்து வங்கிக் கணக்குப் புத்தகங்களுடன் ஒரு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் ரூபா பணம் காணப்பட்டதாக ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

உடப்பு யாய 6ல் வசிக்கும் கதிரேசன் பாலமுருகன் என்ற 49 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

புத்தளம்- சிலாபம் வீதியில் அனவிலுந்தாவ பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த யாசகர் அனவிலுந்தவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த யாசகர் நீண்ட காலமாக யாசகம் எடுத்து வாழ்ந்து வருவதாகவும், விபத்தில் உயிரிழந்த நிலையில், குறித்த யாசகனின் பையை பரிசோதித்த போது, ​​135,000 ரூபா பணம் மிகவும் பத்திரமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், மேலும் ஐந்து அரச மற்றும் தனியார் வங்கிகளின் கணக்குகளில் 47,000 ரூபா பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.