கல்வியினை தொடர முடியாத கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகிய மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட செய்தி ஒன்று பதுளை – புவக்கொடமுள்ள பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

பதுளை – புவக்கொடமுள்ள பிரதேசத்தில் வசிக்கும் 16 வயதுடைய ஆயிஷா பfர்வீன் கடுமையான பொருளாதார நெருக்கடிக்குள்ளாகியுள்ள குடும்பத்தின் மூத்த பிள்ளை.

அவரது தந்தைக்கு நிலையான தொழில் எதுவுமில்லை என்பது குடும்ப பொருளாதார நெருக்கடிக்கு பிரதான காரணமாகும்.

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள ஆயிஷா தனது குடும்பத்தின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கல்வியினை தொடர முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறாள்.

ஆயிஷாவின் உறவினர்:

“.. டீச்சர் சொல்லியிருக்காங்க, நீங்க நல்லா படிக்கிறீங்க கணிதப் பாடத்திற்கு க்ளாஸ் போங்கன்னு.. க்ளாஸ் அனுப்பவும் காசு வேணுமே.. காசு இல்லாதது தான் பிரச்சினையே.. டீச்சர்கள் இப்படிக் கூறும் போது. அவருக்கு க்ளாஸில் இருக்க முடியல்லையாம், அவள் மனமுடைந்து க்ளாஸில் தனியாக ஒதுக்கப்பட்ட ஆளாக தான் இருந்திருக்கிறாள்.. ”  

கடந்த நாட்களில் தனக்கு கணிதப் பாடத்திற்கு மேலதிக வகுப்பிற்கு செல்ல வேண்டும் என ஆயிஷா தனது பெற்றோர்களுக்கு தெரிவித்திருக்கிறாள்.

ஆயிஷாவின் தாய்:

“.. கணிதத்திற்கு க்ளாஸ் போகணும்னு சொன்னா, ஆனால் இப்போ தின்னுறதுக்கே வழியில்ல, க்ளாஸ்க்கு காசு இல்லன்னு சொன்னன்.. “

தாயின் இந்த வார்த்தைகளை கேட்ட ஆயிஷாவின் அடுத்த கட்ட நடவடிக்கை தனது உயிரை மாய்த்துக் கொள்வதாக மாறியது.. அதற்காக மலசலகூடத்திற்கு சென்று அவரது பாட்டிக்கு கொடுக்கும் சில மருந்துகளை குடித்துள்ளதை அடுத்து அவர் அவசரமாக பதுளை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

எனினும், அவரது உயிரைக் காப்பாற்ற வைத்தியர்களால் முடியவில்லை.

ஆயிஷாவின் தாய்:

“.. எனக்கு நான்கு பிள்ளைகள்.. நான் மகள் இப்படி க்ளாஸ் போகணும்னு சொல்றா என்று கூற, எனக்கும் வீட்டுக்காரருக்கும் இடையே சிறு வாக்குவாதம் நடந்தது.. அதில் கணவர் என்னை விட்டுச் போறதா சொன்னாரு.. அதற்குப் பின்னர் மகளுக்கு சரியான கவலை.. தந்தை போனா எப்படி நாம சாப்பிட்றது என்ன செய்வதுன்னு.. அப்படியே மகள் பாண் சாப்பிட்டிட்டு எழுந்து டொய்லட் போனவ தான்…”


– டெய்லி சிலோன்-