விளக்கமறியலுக்கு மாற்றாக சந்தேக நபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கான விதிகளை வகுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் நெரிசல் நீண்ட கால பிரச்சினையாக இனங்காணப்பட்டுள்ள நிலையில் அதற்கு தீர்வாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகளை கைது செய்வதற்கும் தடுப்புக்காவலில் வைப்பதற்கும் பொருத்தமான சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளது.

மேற்படி குழுவின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதியமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.