மக்கள் விடுதலை முன்னணிக்கு பேச்சுதிறன் மூலம் மக்களை வசீகரிக்க முடியும். ஆனால் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேசத்துடன் இணைந்து பணியாற்ற முடியாது. நாட்டை முன்னேற்ற சர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உப தவிசாளரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஏ ஹலீம் தெரிவித்தார்.
ஹாரிஸ்பத்துவ தொகுதிக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் இளைஞர் சக்தி ஸ்தாபிக்கும் விசேட கூட்டம் கட்டுகஸ்தோட்டையிலுள்ள பௌத்த சபை மண்டபத்தில் நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் உரையாற்றுகையில்,
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் பெரும் நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருகின்றது. அத்திhயவசிய பொருட்களின் விலைவாசிகள் அதிகரித்துள்ளது. மக்களுக்கு வாழ்க்கையை முன்னெடுத்து செல்ல முடியாத நிலைமை உருவாகியுள்ளது. மேலும் சமையல் எரிவாயு வெடிப்பு சம்பவங்கள் மூலம் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனை சரி செய்ய முடியாமல் அரசாங்கம் திணறிக்கொண்டிருக்கின்றது.
நாட்டில் தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வேலை;திட்டமும் கொள்கையும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உள்ளது.
தற்போதுள்ள இளைஞர்கள் அரசியல் கட்சிகளின் மீதும் அரசியலில் மீதும் பெரும் வெறுப்புடன் காணப்படுகின்றனர். இந்த நிலைமையை நாம் சரிசெய்ய வேண்டும். நாட்டின் அபிவிருத்தியில் இளைஞர்களை இணைப்பதற்கான நடவடிக்கைகளை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுத்திருந்தது. எனினும் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் வரும் அது இடைநடுவே கைவிடப்பட்டன. எனவே ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். மேலும் தற்போது நாடுபூராகவும் ஸ்தாபிக்கப்படும் இளைஞர் சக்தி பிரதிநிதிகளை பாராளுமன்றம்,மாகாண சபை, உள்ளுராட்சி மன்றங்களுக்கு இளைஞர் பிரதிநிதிகளாக உள்வாங்குவதோடு தொழில்வாய்ப்புகளை வழங்குவோம்.
தற்போது இளைஞர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி முன்னெடுத்து வருகின்றது. மக்கள் விடுதலை முன்னணிக்கு பேச்சுதிறன் மூலம் மக்களை வசீகரிக்க முடியும். ஆனால் அவர்களால் ஆட்சிக்கு வர முடியாது. ஆட்சிக்கு வந்தாலும் சர்வதேசத்துடன் இணைந்து பணியாற்ற முடியாது. நாட்டை முன்னேற்ற சர்வதேச பங்களிப்பு அத்தியாவசியமாகும். அது மக்கள் விடுதலை முன்னணிக்கு கிடையாது. மேலும் அனுபவமிக்கவர்கள் இல்லை என்றார்.